சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு
துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்ததாகக் கூறப்படும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான டொக்டர் சமீர சேனாரத்னவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக, சைட்டம் பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.
இன்று செவ்வாய்கிழமை, பல்கலைக்கழக நிருவாகம் விடுத்திருந்த அறிக்கையொன்றினூடாக, இதனைத் தெரிவித்துள்ளது.
டொக்டர் சமீர மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையினைப் பேணும் பொருட்டும், பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பும் வகையிலும் மேற்படி தீர்மானத்தினை தாம் மேற்கொண்டதாக, சைட்டம் நிருவாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று முதல் தனது பதவியிலிருந்து விலகுவதாக டொக்டர் சமீர சேனாரத்னவும் தமக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக, சைட்டம் பல்கலைக்கழகத்தின் தலைவர் மேற்படி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டொக்டர் சமீர சேனாரத்னவை இலக்கு வைத்து, கடந்த 06ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட நபரொருவர் வழங்கியிருந்த வாக்கு மூலத்தின் படி, மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம், திட்டமிட்டதொரு நாடகம் எனத் தெரிய வந்துள்ளதாக, பொலிஸார் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம்