சட்ட விரோத மாத்திரைகள் விற்ற, கடைக்காரர் கைது
🕔 February 16, 2017
– க.கிஷாந்தன் –
மஸ்கெலியா லக்ஷபான வாழைமலை தோட்டத்தில் பலசரக்கு கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் நோய்களுக்கான மருந்து வகைகளை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இவரைக் கைது செய்ததாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடையில் பல நாட்களாக சட்டவிரோதமான முறையில் அப்பகுதி மக்களுக்கு தலைவலி, காய்ச்சல் மற்றும் இதர நோய்களுக்கான சில மருந்து வகைகளை, அந்தக் கடை உரிமையாளர் விற்பனை செய்து வந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் விசேட பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, விரைந்த பொலிஸார் அக்கடையை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
தேடுதலின் போது சட்டவிரோதமான முறையில் மாத்திரைகள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சுமார் 500ற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜரப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.