
கொழும்பு நகரில், குடும்பத்தினை தலைமை தாங்கி வாழும் பெண்களுக்கு, புனித நோன்பு காலத்தையொட்டி – உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷபீக் ரஜாப்தீன், இந் நிகழ்வினை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்திருந்தார்.
கணவர்மாரை இழந்தும், பிரிந்தும் வாழ்கின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இதன்போது – உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கொழும்பு மாவட்டத்தில், கணவர்மாரை இழந்தும் – பிரிந்தும், சுமார் 12 ஆயிரம் பெண்கள் இருப்பதாக – மு.கா.வின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் இதன்போது குறிப்பிட்டார். மேலும், முதற்கட்டமாக அவர்களில் 1500 பேர் வரையிலானவர்களை அடையாளம் கண்டு, இந்த உதவி வழங்கப்படுவதாகவும், இவர்களை இனம் காண்பதற்கு பள்ளிவாசல்கள் உதவி புரிந்ததாகவும் கூறினார்.
இதன்போது அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில்; கணவர்மாரை இழந்தும் – பிரிந்தும் குடும்பத்தை தலைமை தாங்கி வாழும் பெண்கள், நாடெங்கிலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் குடும்பச் சுமையோடு வாழ்ந்து வருவதாகவும், அவர்களைப் பற்றிய கணிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படாமையானது கவலைக்குரியதென்றும் சுட்டிக்காட்டியதோடு, இத்தகைய சமூகப் பணி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 



