மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா
– முன்ஸிப் அஹமட் –
மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நாளை திங்கட்கிழமை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது.
கடந்த செவ்வாய்கிழமை மாலை, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
நாளை மறுநாள் திங்கட்கிழமையே, மு.கா. தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்வார் என்றும், அந்த வெற்றிடத்துக்கு அன்றைய தினமே ஹசனலி சத்தியப் பிரமாணம் செய்ய முடியும் என்றும் ஹக்கீம் இதன்போது கூறியுள்ளார்.
திங்கட்கிழமை நாடாளுமன்ற அமர்வு இல்லை என்கிற போதும், சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய முடியும் எனவும் ஹக்கீம் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
எவ்வாறாயினும், சல்மான் ராஜிநாமா செய்கின்றமை குறித்து, ஐ.தே.கட்சியின் கடிதமொன்றினை் பெற்று, அதனை தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனையடுத்து சல்மான் ராஜிநாமா செய்தமை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்படும், அது – ஆகக்குறைந்தது அன்றைய தினம் நள்ளிரவில்தான் வெளியிடப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே, சல்மானின் ராஜநாமா வெளியிடப்பட்ட பின்னர்தான் அந்த வெற்றிடத்துக்கு ஹசனலியின் பெயரை அறிவிக்க முடியும். இதன் பின்னர்தான் ஹசனலி சத்தியப் பிரமாணம் செய்யலாம்.
ஆக, சல்மான் ராஜிநாமா செய்யும் அதே நாளில், அந்த வெற்றிடத்துக்கு ஹசனலியை நியமித்து, அதே தினம் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், இவையனைத்தினையும் எதிர்வரும் திங்கட்கிழமை மேற்கொள்ள முடியும் என்று, ஹசனலிக்கு ஹக்கீம் வாக்குறுதி வழங்கியிக்கிறார் எனத் தெரிய வருகிறது.
இவ் விவகாரம் குறித்து தெரிந்து கொண்ட மு.கா.வின் சில உயர்பீட உறுப்பினர்கள், ஹசனலி தொடர்பில் அனுதாபப்பட்டுள்ளனர்.
“இன்னும் ஹசனலி சூது – வாது தெரியாத மனிதராகவே இருக்கின்றார். அதனால், ஹக்கீமுடைய சூழ்ச்சிகளை உடனடியாக அவரால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது” என்று, மேற்படி உயர்பீட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.