இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது: ஞானசார தேரர் சொல்கிறார்
பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தைதான் சிறந்த வழியென பௌத்த மதம் போதித்துள்ளது என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவ்வழியையே இனிமேல் தாம் பின்பற்றப் போவதாகவும், இனவாதத்தால் எதனையும் செல்ல முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சருக்கும் சிங்கள தேசியவாத அமைப்புகளுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பையடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே ஞானசாரர் இவ்வாறு சொன்னார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி பேசப்பட்டு வரும் இவ்வேளையில், இனவாதம் பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பு மற்றொரு தரப்பை விமர்சிக்கின்றது.
நாம் பல போராட்டங்களை நடத்தினோம். ஊடகங்களில் அவை வெளிவரும். ஆனால் அதன் பின்னர் எதுவும் நடக்காது. பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கு எமக்கு ஒரு களம் கிடைக்காமையே நெருக்கடிகளுக்கு காரணம்.
பௌத்த பிக்குகள் தொடர்பாக அண்மையில் நாடாளுமன்றில் நீதியமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு நாம் இச் சந்திப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். எவ்வாறெனினும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிகை ஏற்பட்டுள்ளது” என்றார்.