மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு
🕔 October 11, 2016
– பழுலுல்லாஹ் பர்ஹான் –
மட்டக்களப்புக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற – யுத்தத்தின் போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்பு ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதோடு விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விகாரையின் வளாகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தாங்கிய புதுமதுர கட்டடம், முன்னாள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டு அங்கு வழிபாடும் நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளில் பௌத்த மதகுருமார்கள், இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டு மாவட்ட முன்னாள் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.