883 மில்லியன் ரூபாய் மோசடி குற்றச்சாட்டு; சஜின் வாஸ் பிணையில் விடுதலை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மிஹின் லங்கா விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சஜின்வாஸ் குணவர்த்தன இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் சஜின் ஆஜரானாபோதே, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
02 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும் இவர் விடுவிக்கப்பட்டார்.
மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சஜின்வாஸ் கடமையாற்றியபோது, விமான நிறுவனத்துக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு, 883 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒப்பந்தமொன்றினை, சட்ட விரோதமாக தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல், 2008 மே மாதம் வரையிலான காலப் பகுதியில், மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக சஜின்வாஸ் பணியாற்றியிருந்தார்.