சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு
🕔 August 3, 2016
– பழுலுல்லாஹ் பர்ஹான் –
காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா சிறுவர் கல்லூரியில் இடம்பெற்றது.
‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் நடத்தப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வினை, காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் – இரத்த வங்கி பிரிவின் உதவியோடு மேற்படி இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் 1990ஆம் ஆண்டு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்களை, விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி படுகொலை செய்த 26வது ஆண்டினை நினைவுகூறும் சுஹதாக்கள் தினத்தில், இந்த இரத்த தான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பீ.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு, இரத்த தானம் வழங்கினர்.