கல்வி நிர்வாக சேவை; வினாப் பத்திரங்கள் பேஸ்புக்கில்: பரீட்சார்த்திகள் சந்தேகம்
– அப்துல் கபூர் –
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை வினாப்பத்திரம், பேஸ்புக்கில் வெளியாகியுள்ளமை காரணமாக, பரீட்சைத் திணைக்களத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தள்ளதாக பரீட்சார்த்திகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்காக, திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சேவை மூப்பு அடிப்படையில் போட்டிப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தவகையில், கடந்த ஜூலை மாதம் 10 ம் திகதி கொழும்பில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரிட்சையின் வினாப்பத்திரம் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளது.
வினாத் தாள்களிலேயே பரீட்சார்த்திகள் விடையளித்து விட்டு, அவற்றினை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வந்த நிலையில், குறித்த வினாத்தாள்கள் எவ்வாறு பேஸ்புக்கில் வெளியாகின எனும் கேள்வி எழுந்துள்ளது.
இதன் காரணமாக, பரீட்சைத் திணைக்களத்தின் மீது சந்தேகமும், அத்திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைகள் தொடர்பில் நம்பகமற்ற தன்மையும் உருவாகியுள்ளதாக, மேற்படி பரீட்சைக்கு தோற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.
பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டு, மண்டத்தினுள்ளே மீளப் பெற்றுக் கொள்ளப்பட்ட வினாப்பத்திரம், பேஸ்புக்கில் வெளியிடப்ப்பட்டமை குறித்து, பரீட்சைத் திணைக்களம் உரிய நடவடிக் எடுக்க வேண்டும் எனவும் பரீட்சார்த்திகள் கோருகின்றனர்.