அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் பசியாற்றும் நிகழ்வு
🕔 June 21, 2016
– முன்ஸிப் –
கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, வட மாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தினூடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்கு, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் பசியாற்றும் நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டம் தாண்டியடி பிரதேசத்தில் இடம்பெற்றது.
கதிர்காமத்துக்கு புனித யாத்திரை செல்லும் வகையில், வட மாகாணத்திலிருந்து கடந்த மே மாதம் 15 ஆம் திகதி புறப்பட்ட இந்த யாத்திரிகர் குழு, நேற்று திங்கட்கிழமை; அம்பாறை மாவட்டம் தாண்டியடி பிரதேசத்தினை வந்தடைந்தது.
104 பேரைக் கொண்ட இந்தக் குழுவினர், தாண்டியடி பிள்ளையார் ஆலயத்தில் தரித்து – பின்னர் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.
இதன்போது, இன நல்லுறவை வலுப்படுத்தும் வகையில், இந்த யாத்திரிகர்களுக்கு பசியாற்றும் வகையில் பானங்களையும், உணவுகளையும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையினர் வழங்கி வைத்தனர்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பேரவையின் நிருவாகசபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு, யாத்திரிகர்களுக்கான பானங்களையும், உணவுகளையும் வழங்கி வைத்தனர்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இந்த நடவடிக்கை தொடர்பில், யாத்திரிகர்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
(படங்கள்: எம்.ஐ.எம். அஸ்ஹர்)