ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணியில் மஹிந்த பங்கேற்பு
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் நோக்கில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவானவர்களினால் கொழும்பு ஹைட்பார்க் பகுதியில் இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கலந்து கொண்டுள்ளார்.
இந்த பேரணியில் ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் குமார வெல்கம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக பேரணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கொழும்பு ஹைட் பார்க் பிரதேசத்தில், பதற்றமான சூழல் நிலவிய நிலையில், அங்கு பெருமளவான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை குறித்த பேரணியில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரேனும் பங்குபற்றினால், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எச்சிரித்திருந்த நிலையில், மஹிந்த உட்பட அவருக்கு ஆதரவானவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.