ஒலுவில் பிரகடனம்: சிலரின் அரசியல் வாகனத்துக்கான எரிபொருள் ஆகிவிடக் கூடாது

🕔 January 30, 2016
Oluvil - 0002
– ஜெஸ்மி எம். மூஸா –

லுவில் பிரகடனம் 2003 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. 13 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தப் பிரகடனத்தின் நினைவலைகளை மீட்டிப் பார்க்கும் இத்தருணம் மகிழ்ச்சிக்குரியது.

முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி, முஸ்லிம் தலைமைகளை சிந்திக்க வைக்கும் உயர்ந்த நோக்கில் ஒலுவில் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் அன்று சமூக அக்கறையுடன் தன்னை இணைத்துக் கொண்ட முன்னாள் போராளி சேகு இஸ்ஸடீன் அவர்களின் மறைவான நிகழ்ச்சி நிரலில் நடந்தேறிய வரலாற்றுத் தடம்தான் ஒலுவில் பிரகடனமாகும்.

இன்றைய அரசியலில் ஈடுபடுகின்ற சிலருக்கான அரசியல் வாகன எரிபொருளாக இப்பிரகடனம் இருந்து வருகின்ற போதிலும், இதன் சொந்தக்காரர்கள் ஒலுவில் பல்கலைக்கழகத்தின் அன்றைய சமூக அக்கறையுள்ள மாணவர் குழுவே என்பதை இச் சந்தர்ப்பத்தில் சுட்டிக் காட்ட விளைகின்றோம்.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை – கல்முனையில் செயற்பட்டு, அன்னை பூபதிக்காக நினைவு வீதியமைத்த காலத்தில்தான் ஒலுவில் பிரகடனமும் நிறைவேறியது. குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர் குழுக்களின் உயிர்த்துச்ச செயற்பாட்டின் வரலாற்றுச் சின்னம்தான் இப்பிரகடனமாகும்.

நமது சமூகத்தில் அக்கறை கொண்ட விடுதலை அமைப்புக்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் ஊடக நிறுவனங்கள் அன்றைய தினம் முதல் ஆற்றிய பங்களிப்பினையும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் அன்றைய நிருவாகக் கட்டமைப்பினர் வழங்கிய ஆதரவையும் மறந்து விட முடியாது.

ஒலுவில் பிரகடனம் ஒரு மாணவர் சமூகத்தின் தியாகம். சமூக விளக்கமுள்ளவர்களின் உந்துகை.

இதில் இன்னும் மீட்டப்பட வேண்டிய பக்கங்கள் பல இருந்தும், சிறு குறுக்கீடாக இதனைப் பதிவதற்கு உரித்துடைய நண்பர்கள் வட்டத்துள் ஒருவனாக இப்பதிவினை இட்டுள்ளேன். அவ்வப்போது ஒலுவில் பிரகடனம் தொடர்பில் நமது நண்பர்கள் உரையாட விரும்பும் விடயங்கள் பலவுள்ளன. தேவை ஏற்படும் போது அரசியல் மேடைகளுக்கும் வரலாம்.Oluvil - 0003Oluvil - 0004Oluvil - 0001Oluvil - 0005

Comments

புதிது பேஸ்புக் பக்கம்