ரயிலில் ரஷ்யா வந்த வடகொரிய ஜனாதிபதி: ரொக்கட் தளத்தில் புட்டினை சந்தித்தார்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, ரஷ்யாவின் ‘வோஸ்டொக்னி’ (Vostochny) ரொக்கெட் ஏவுதளத்தில் இன்று (13) இடம்பெற்றுள்ளது.
ரயில் மூலமாகவே ரஷ்யாவுக்கான பயணத்தை கிம் ஜாங் உன் மேற்கொண்டுள்ளார்.
பொதுவாக உலகத் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணத்தின் போது ரயிலைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், விமானத்தில் பறந்தால் எளிதில் சுட்டு வீழ்த்தப்படும் ஆபத்து இருப்பதால் கிம் ஜாங் உன் எப்போதும் ரயில் பயணத்துக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
குண்டு துளைக்காத ரயில் மூலம் பயணம் செய்யும் போது, அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினம் என்பதால் அது பாதுகாப்பான பயணமாக இருக்கும் என கிம் நினைக்கிறார்.
வட கொரிய தலைவர்கள் நீண்டகாலமாக கடைப்பிடிக்கும் பாரம்பரியத்திற்கு ஏற்ப, மெதுவாக நகரும் ரயில் வண்டியில் சுமார் 1,180 கிலோ மீட்டர் (733 மைல்கள்) பயணம் செய்ய கிம் ஜாங் உன் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட வேண்டியிருந்தது.
இந்த சந்திப்பின் போது, “உங்களின் நெருக்கடியான அலுவல்களுக்கு மத்தியில் எங்களை அழைத்ததற்கு நன்றி” என்று கிம் ஜாங் உன் கூறியுள்ளார். பின்னர் ரொக்கெட் ஏவுதளத்தை கிம்முக்கு புதின் சுற்றிக் காட்டினார்.
இந்தப் பயணத்தில் கிம் ஜாங் உன் உடன் ராணுவ உயரதிகாரிகளும் இடம்பெற்றிருந்தமையானது, ஆயுத விற்பனை குறித்த பேச்சுக்களுக்கான சாத்தியம் இருந்தமையினை பறைசாற்றியதாக செய்திகள் கூறுகின்ற.
ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை விற்பனை செய்வது குறித்து மேற்குலக நாடுகள் கவலைகளை வெளிப்படுத்தும் நிலையில், என்ன மாதிரியான ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வடகொரியா விற்கும் என்பதும், அதனால் யுக்ரேன் மீதான போரில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதும் கேள்விக்குறியாகவே தொடர்கின்றன.