குலுக்கலில் வென்று, ஏறாவூர் நகர சபைத் தவிசாளரானார் முன்னாள் மாகாண அமைச்சர் சுபையிர்

🕔 January 25, 2023

எஸ்.அஷ்ரப்கான், றியாஸ் ஆதம் – 

றாவூர் நகர சபையின் தவிசாளராக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் சுபையிர் செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏறாவூர் நகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால், அந்த சபையின் தவிசாளர் பதவியிழந்தார்.

இதனையடுத்து, ஏறாவூர் நகர சபையில் வெற்றிடமாகக் காணப்பட்ட தவிசாளர் பதவிக்கு புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் 16 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது தவிசாளர் பதவிக்காக எம்.எஸ். சுபையிர் மற்றும் கே. இஸ்மத் இப்திகார் ஆகியோரின் பெயர்கள் சபையில் முன்மொழியப்பட்டன. அதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது இரு உறுப்பினர்களுக்கும் தலா 8 வாக்குகள் அளிக்கப்பட்டன.

குறித்த இரு உறுப்பினர்களுக்கும் சம அளவிலான வாக்குககள் கிடைத்தமையினால், உள்ளூராட்சி சட்ட விதிகளின் பிரகாரம் குலுக்கல் முறை சீட்டெடுப்பின் மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் சபையில் அறிவித்தார்.

இதனையடுத்து இடம்பெற்ற குலுக்கலின்போது, முன்னாள் அமைச்சர் சுபையிர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். 

நடைபெறவுள்ள ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிர் தலைமையிலான அணியொன்று – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்