குஜராத்தில் தொங்கு பாலம் வீழ்ந்ததில் 141 பேர் மரணம்

🕔 October 31, 2022

ந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் ஆகக்குறைந்தது 141 பேர் உயிரிழந்துள்ளனர். இறநதவர்களில் பெண்கள், சிறுவர் மற்றும் முதியோர் அதிகமானவர்கள் எனக் கூறப்படுகிறது.

230 மீற்றர் நீளமான இந்தப் பாலம் 19ஆம் நூற்றாண்டில், பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்டது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், விமானப் படை, ராணுவம், கடற்படை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு முழுவதும் 200 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 177க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றுக்கு மேல் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கினர்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடி கொண்டு இருந்ததால் பாலத்தில் அதிகளவிலான மக்கள் இருந்தனர். இந்த பாலம் நேற்று மாலை 6.40 மணியளவில் இடிந்து விழுந்தது.

“குழந்தைகளுக்கு தீபாவளி விடுமுறை என்பதால் பாலத்தை காண பலர் சுற்றுலாப் பயணிகளாக வந்திருந்தனர்” என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

“ஒருவர் மீது ஒருவர் என அனைவரும் கீழே விழுந்தனர். அதிக கூட்டம் இருந்ததால் பாலம் விழுந்தது” என அவர் கூறியுள்ளார்.

பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட ஒரு வரத்தில் இது நடந்திருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்