பாடசாலைகளில் மாணவர்களிடம் எந்த நிகழ்வுகளுக்கும் பணம் அறவிடக் கூடாது; மீறினால் அறிவிக்க வேண்டும்: கல்வியமைச்சின் செயலாளர்

🕔 October 2, 2022

ல்வி மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணங்களைத் தவிர, மேலதிகமாக பாடசாலைகளில் எதனையும் அறிவிடுவதற்குக் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அல்லது பெற்றோரிடமிருந்தோ பணம் அறவிடக் கூடாது என அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளில் முறையற்ற வகையில் பணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் 2015/5 ஆம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதை வலியுறுத்தி – கல்விச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடுமையான நிதி சிக்கல்களுக்கு மத்தியில் பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் திண்டாடுவதால், இதுபோன்ற பணச் செலவுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பு என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்களிடம் இருந்து தேவையின்றி பாடசாலைகள் பணம் கேட்கும் பட்சத்தில், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு என செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

பணம் கேட்டு தாக்கப்பட்ட மாணவி

ஹட்டன் கொட்டகலை போகஹவத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் தின நிகழ்வுக்காக 300 ரூபாவை செலுத்தாத காரணத்தினால், குறித்த பாடசாலை மாணவியை அதிபர் துடைப்பத்தால் அடித்த சம்பவம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுத்து பாடசாலைக் கட்டணத்தைக் கூடக் கோரக்கூடாது எனவும், பெற்றோர்கள் பணத்தை செலுத்த முடியாத நிலையில் இருந்தால், கிராம சேவகரிடம் சான்றிதழைப் பெற்று, அதனை பாடசாலையில் சமர்ப்பித்து பணத்தைச் செலுத்தாமல் இருக்க முடியும் எனவும் கல்விச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்