சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவர் கோர்பச்சேவ் மரணம்

🕔 August 31, 2022

சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் மிகையீல் கோர்பச்சேவ் தனது 91வது வயதில் ரஷ்யாவில் காலமானார்.

சோவியத் ஒன்றியத்தில் நிலவிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர், கம்யூனிஸ்ட் நாடுகளின் தொகுப்பை முன்னின்று நடத்தியவர் என, இவருக்கு பல அடையாளங்கள் உள்ளன.

1985ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவிக்கு வந்த இவர், இரும்புத் திரை கட்டுப்பாடுகளை நீக்கி – நாட்டை உலகுக்கு திறந்து விட்டார்.

உள்நாட்டில் பல சீர்திருத்தங்களை இவர் அறிமுகம் செய்த போதிலும், கடைசியில் சோவியத் ஒன்றியம் சிதைவதை இவரால் தடுக்க முடியவில்லை. ரஷ்யா, யுக்ரேன் உள்ளிட்ட பல நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் சிதைவை அடுத்து தனித்தனி நாடுகளாக உருவாயின.

மிகையீல் கோர்பச்சேவ், வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்று கூறி ஐ.நா. தலைமைச் செயலாளர் அண்டோனியா குட்டரஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். “மிகையீல் கோர்பச்சேவ் இரக்கம் மிகுந்த அரசியல் தலைவர். அமைதிக்காக சோர்வின்றி பாடுபட்ட, பலமுனை உறவுகளுக்கு ஆதரவான, மிக உயர்ந்த தலைவர் ஒருவரை உலகம் இழந்துவிட்டது” என்று அவர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கோர்பச்சேவ் மறைவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் நீடித்த, தீவிர நோய் ஒன்றின் காரணமாக அவர் இறந்துவிட்டார் என, மோஸ்கோவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சேருவதும், வீட்டுக்குத் திரும்புவதுமாக அவர் இருந்தார். சிறுநீரக கோளாறு ஒன்றுக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கடந்த ஜுன் மாதம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அவரது மறைவுக்கான காரணம் தற்போது விவரிக்கப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்