ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களை நடத்தியோர் அரசியலிலும், பொலிஸ் அதிகாரிகளாகவும் உள்ளனர்: பேராயர் மல்கம் ரஞ்சித்
ஈஸ்டர் தின குண்டு தாக்குதல்களை நடத்தியவர்கள், இன்றுவரை அரசியலில் உள்ளனர் எனவும், பொலிஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர் என்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மட்டக்குளிய மோதரை, புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் வருடாந்தப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பேராயர்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மை – கம்பளத்தின் கீழ் கிடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். நாட்டின் சக்திவாய்ந்த சிலர், தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தனர் என்பதே இதற்கான காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
2019 இல் மூன்று தேவாலயங்கள் மற்றும் சில ஹோட்டல்களில் தாக்குதல்களை நடத்தியவர்கள், இன்னும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளாகவும் பணியாற்றுகிறார்கள். இதன் காரணமாக நீதிக்கான கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கத்தோலிக்கர்கள், தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கர்தினால் கோரியுள்ளார்.
அத்துடன் “பொரளையிலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த பலம் வாய்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள்தான் அந்த தேவாலயத்தில் கைக்குண்டை வைத்திருந்தனர். இருப்பினும் காப்பாளர்கள் உட்பட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தாக்கப்பட்டனர். சில ஆவணங்களில் கையொப்பம் இட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.