நிமலுக்கு எதிரான லஞ்சக் குற்றச்சாட்டு: விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டது

🕔 July 31, 2022

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீதான லஞ்ச – ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை இன்று (31) கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் லஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் விசாரணை ஒன்றை மேற்கொள்ள மூவரடங்கிய விசாரணை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் – நாடாளுமன்றத்தில் அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பக்கச்சார்ப்பற்ற விசாரணை ஒன்றை நடத்துமாறு கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையிலான இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்க, ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு அதிகாரியான எஸ்.எம்.ஜீ.கே. பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

விசாரணை அறிக்கையை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கையளிக்குமாறு ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் குறித்த அறிக்கை இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: நிமல் கையூட்டல் கோரினாரா: விசாரணை மேற்கொள்ள குழு நியமனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்