சைக்கிள் ஓட்டுநர்களுக்கு கொழும்பில் தனி பாதைகள் மற்றும் வசதிகள்
சைக்கிள்களுக்கென கொழும்பு மாநகர சபை இன்று (30) கொழும்பின் சில பகுதிகளில் தனியான பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, கொழும்பில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
டச்சு வைத்தியசாலைக்கு அருகாமையிலும், ஜனாதிபதி மாவத்தைக்கு அருகில் உள்ள இலங்கை வங்கி இடத்திலும், கொழும்பு துறைமுகம் வரையிலான ஆர்மர் வீதியிலும் தனியான சைக்கிள் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை சைக்கிள்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் விரைவில் அதிக சைக்கிள் பாதைகளை கொழும்பு மாநகர சபை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.