ஆசிரியை பஹ்மிதா தொடுத்த வழக்கு: திருகோணமலை சண்முகா கல்லூரி அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

🕔 June 13, 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ், பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் அதிபர் லிங்கேஸ்வரிக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் எழுத்து மூலக் கட்டளைக்கிணங்க, சென்ற பெப்ரவரி மாதம் 02ம் திகதி திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கடமையேற்பதற்காக சென்றிருந்த பஹ்மிதா றமீஸை, கடமையேற்க விடாது பல குழப்பங்களை ஏற்படுத்தி, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது சட்டரீதியான கடமையை செய்யத் தடுத்தமை என்ற குற்றச்சாட்டின் பெயரில், திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றில் சென்ற மார்ச் மாதம் ஆசிரியை பஹ்மிதா வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பிட்ட வழக்கில் ஆசிரியை பஹ்மிதாவுக்கு ஆதரவாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான் றதீப் அஹமட், ஹஸன் றுஷ்தி, முஹைமின் காலித் மற்று ஸாதிர் அஹமட் ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணம் செய்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இம்மாதம் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணிகளான முபஸ்லீன் மற்றும் றிஸ்வான் ஆகியோர் வாதி தரப்பில் ஆஜராகினர்.

ஏலவே மன்றின் நீதிவான் – குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் செய்த சமர்ப்பணத்தை ஏற்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

இவ்வழக்கானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

ஷண்முகா கல்லூரியின் ஆசிரியை பஹ்மிதா விவகாரத்தில் ஆரம்பம் முதல், குரல்கள் இயக்கம் – பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஹபாயாவுடன் சென்ற ஆசிரியை மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி: திருகோணமலை ஷண்முகாவில் முடிவுக்கு வராத கலாசாரப் பயங்கரவாதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்