ஸஹ்ரான் மனைவிக்கு தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் கையளிப்பு

🕔 May 28, 2022

– பாறுக் ஷிஹான் –

ஸ்டர் தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின்  மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் – சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலம் வெள்ளிக்கிழமை (27) அவரின், சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

கடந்த தவணையின்போது ஸஹ்ரானின் மனைவி ஹாதியா சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி, பிரதிவாதிக்கு எதிரான சான்றாக முன்வைக்கபப்டும் அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால், அதன் தமிழ் மொழிபெயர்ப்பு அவசியம் என நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால், அவை தமிழில் மொழி பெயர்க்கப்படல் வேண்டும் எனவும், அப்போதே பிரதிவாதிக்கு – தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணி கூறியிருந்தார்.

அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய, பிரதிவாதியான ஸஹ்ரானின் மனைவிற்கு  எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு, நேற்றைய வழக்கு விசாரணையின்போது   பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் கையளித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 21 திகதிக்கு மறுதவணை இடப்பட்டுள்ளது.

இதன்போது ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா – பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்