ஆள்மாறாட்டம் செய்தவர்களுக்கு பிணை

🕔 May 28, 2022

– பாறுக் ஷிஹான் –

ரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று நேற்று (27) பிணை வழங்கியுள்ளது.

நாடு பூராகவும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை கடந்த  திங்கட்கிழமை(23) ஆரம்பித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டம் கல்முனை வலயக்கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பரீட்சை எழுதிய நபர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்திருந்தார்.

தனிப்பட்ட பரீட்சார்தியாக தோற்றுவதற்கு வந்த 21 வயது மதிக்கத்தக்கவர் நபர், ஆள்மாறாட்டம் செய்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அம்பாறை புற நகர் பகுதியில் இருந்து வருகை தந்திருந்த இவர், சம்பவ தினமன்று நடைபெற்ற சிங்கள மொழி மூலம்  சமயபாட பரீட்சையை 32 வயதுடைய  தனிப்பட்ட பரீட்சார்த்தியின் அனுமதி அட்டையை பாவித்து அவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து  எழுதியதுடன், தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இரு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டு   பெரியநீலாவணை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டனர். பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை (24) அன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் பின்னர் நேற்று (27) வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்