இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவி வகித்த பிறகு, மஹிந்த ஓய்வு பெற்றிருக்க வேண்டும்: சபையில் சமல் தெரிவிப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரின் இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடைந்ததன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என, அவரது சகோதரரும்நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யத் தவறியதன் விளைவாகவே தற்போதைய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷ முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
“கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அவரின் சிறப்பான அரசியல் சாதனைகள் மற்றும் பயணம் தற்போது தொலைந்து போயுள்ளது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசியலில் பிரவேசிப்பது மற்றும் ஈடுபடுவதுடன், சரியான நேரத்தில் வெளியேறவும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
“அதிகாரம் மற்றும் அரசியல் பதவிகளுக்கள் மீது நாம் பேராசை கொண்டால், இன்று நாம் காணும் இத்தகைய விளைவுகளை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.