விலங்கியல் பூங்கா பணிப்பாளர் ஷெர்மிலாவை, அமைச்சர் விமலவீர வார்த்தைகளால் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, தன்னை வார்த்தையால் துன்புறுத்தியதாக, தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிலா ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
தனக்கு ‘வெள்ளைத் தோல்’ இருப்பதால், ஊடகங்களின் ஆதரவைப் பெறுவதாக, முன்னாள் அமைச்சர் தன்னிடம் கூறியதாக ஷெர்மிலா ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டதாகத் தெரிவித்த அவர்; இது ஒரு வருந்தத்தக்க நிலை என்றும், ஒரு பெண் என்ற முறையில் தாம் வெட்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷெர்மிளா ராஜபக்ஷவை, முன்னாள் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கண்டித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஹம்பாந்தோட்டை, ரிதியகம சபாரி பூங்காவில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, ஷெர்மிளா ராஜபக்ஷ வாய்மொழியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளிப்படுத்தினார்.
ரிதியகம சஃபாரி பூங்காவில் சேவையாற்றும் பிரபல கால்நடை வைத்தியர் ஒருவரை, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் குழுவொன்று தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.