அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

🕔 January 17, 2022

ரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடற்றொழில், விவசாயம், நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றாடல் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தனது சொந்தக் கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏனைய அரசியல் கட்சிகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்கனவே சூசகமாக அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீப காலமாக அரசாங்கத்தின் சில கொள்கைகளை விமர்சித்து வருகின்றனர். இந்த பிளவு மிகவும் அதிகரித்துள்ளதால் சு.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான மோதல்களைத் தவிர்க்குமாறு கனிஷ்ட நாடாளுமுன்ற உறுப்பினர்களுக்கு அண்மைய நாட்களில் ஆலோசனை வழங்கியுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்டமானவர்கள், அரசாங்கத்தில் இருந்து மரியாதையுடன் வெளியேற சுதந்திக் கட்சியை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையானது பொதுஜன பெரமுனவுடன் பிளவுபடுவதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் என டெய்லி மிரருக்கு அறியக் கிடைத்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியதும், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்க்கட்சி வரிசையில் அமரக்கூடும் என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் அமர்திருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் சில சிறுபான்மைக் கட்சிகளுடனும் பொதுஜன பெரமுன பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் காட்டியுள்ளனர். இருந்தபோதிலும் பிரதி அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை அவர்களுக்கு வழங்கினால், பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து அவர்கள் ஆதரவளிப்பர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

புதிய அமைச்சரவை மாற்றத்தில், புதிய முகங்களும் முக்கிய அமைச்சுக்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சில ராஜாங்க அமைச்சுக்களுக்கு மேலும் பொறுப்புகள் வழங்கப்படும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்