ஐஸ் போதைப் பொருள் கடத்திய நபர் காத்தான்குடியில் கைது
– பாறுக் ஷிஹான் –
ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (20) இரவு காத்தான்குடி மத்திய மகாவித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, விசேட அதிரடிப்படை குழுவினர் தேடுதலை மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றின் ஊடாக, ஐஸ் போதைப்பொருள் கடத்திய சந்தேக நபரை கைது செய்ததோடு, 64.286 மில்லி கிராம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் பைக்கற்றினையும் கைப்பற்றினர்.
இதன் போது குறித்த போதைப்பொருளை கடத்திய காத்தான்குடி 06ஆம் பிரிவினை சேர்ந்த சந்தேக நபரான 50 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரான நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் காத்தான்குடி பொலிஸரிடம் சட்ட நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் பாரப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், சான்றுப் பொருட்களையும்மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.