‘அத்தியவசிய சேவை’ எனும் போர்வையில் பெருந்தொகை உரம் கடத்தியோர் லொறியுடன் கைது: சம்மாந்துறை பொலிஸார் அதிரடி
– பாறுக் ஷிஹான் –
யூரியா உள்ளிட்ட உர மூடைகளை அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்திய இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை அம்பாறை பொலிஸ் விசேட பிரிவின் புலனாய்வு தகவலுக்கமைய சம்மாந்துறை பொலிஸார் பசளைகளை கடத்தி சென்ற இருவரை கைது செய்ததுடன் லொறியுடனான 350 உர மூடைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட 350 உர மூடைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது லொறியில் பயணம் செய்த சாரதி மற்றும் நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்னர்.
கைப்பற்றப்பட்ட யூரியா உள்ளிட்ட உர வகைகள் லொறி மற்றும் கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.