கொரோனா வைரஸ்; 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு

🕔 June 25, 2021

லகையே ஆட்டிப்படைத்து வரும் தற்போதைய கொரோனா வைரஸ், 20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

அதன் மரபணுத் தாக்கமும் தெற்காசியப் பகுதிகளில் காணப்படுவதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

‘கரென்ற் பயோலஜி’ (Current Biology) என்ற ஆய்விதழில் வெளியான கட்டுரையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்போது சீனா, ஜப்பான், மங்கோலியா, வடகொரியா, தென் கொரியா மற்றும் தைவான் என்று அழைக்கப்படும் பகுதிகளில் கொரோனா வைரஸ் போன்ற ஒரு பெருந்தொற்று பரவியதாக அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே பல கொரோனா பெருந்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. சார்ஸ், மெர்ஸ், எபோலா என்று வைரஸ்கள் பரவிய வண்ணமே உள்ளன. இதில் 2002-ல் சீனாவில் 800 பேரும் 2012-ல் சஊதி அரேபியாவில் 850 பேரும் பலியாகியுள்ள நிலையில், தற்போது உலகம் முழுதும் பரவிய பலவகை உருமாறிய கொரோனா தொற்றுக்களினால் 3.8 மில்லியன் பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், அரிசோனா பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அடிலெய்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர், 20,000 ஆண்டுக்கு முந்தைய கொரோனா பரவலின் மானிட மரபணுவின் சுவடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வு கூறுவது என்ன?

இந்த ஆய்வாளர்கள் பொதுவான மனித மரபணு மாற்றங்களின் பொதுத் தொகுபான 1000 ஜெனோம்ஸ் புரோஜெக்ட் தரவுகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் சார்ஸ் கொரொனா வைரசுடன் ஊடாடும் புரோட்டீன்களின் மனித மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தனர்.

பிறகு கம்ப்யூடேஷனல் ஆய்வு மாதிரியில் மனித மற்றும் சார்ஸ் கொவிட்-2 புரோட்டீன்களின் ஒத்திசைவை கண்டனர். மானுட செல்களில் கொரோனா வைரஸ் எப்படி ஊடுருவுகிறது என்பதில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றம் எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்தனர்.

இந்நிலையில்தான் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவில் பரவிய கொரோனா போன்ற பெருந்தொற்று வைரஸுக்கு எதிராக, மானுட மரபணு மாற்றங்களினால் மனித உடல் எதிர்ப்புச் சக்திகளை வளர்த்துக் கொண்டுள்ளது.

பலதரப்பட்ட மக்கள் திரளின் வித்தியாசமான மரபணுக்கள் இத்தகைய வைரஸ்களுக்கு எதிராக தங்களை தகவமைத்துக் கொண்டது எப்படி என்பதற்கான ஆய்வில், இது முன்னுதாரண ஆய்வாகும். அதேபோல் கடந்த காலங்களில் பாதித்த இத்தகைய பெருந்தொற்று குறித்த ஆய்வை விரிவு படுத்தவும் உதவும்.

இதன் மூலம் எதிர்காலத்தில் அபாயகரமாகப் பரவக்கூடிய வைரஸ் பற்றிய பட்டியலை உருவாக்கி – இதற்கான நோய்க்கணிப்பு முறைகள், தடுப்பு மருந்துகளை கண்டுப்பிடிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்