ஈஸ்டர் தாக்குதல்; அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சில வாரங்களில் வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சரத் வீரசேகர

🕔 May 31, 2021

ஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய சந்தேக நபர்கள் சகலருக்கும் எதிராக அடுத்த ஒரு சில வாரங்களில் சட்டமா அதிபர் வழக்குத் தொடுப்பார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இவ்வாறான திட்டமிடப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்ட நபர்களை கண்டறிவது இலகுவான காரியம் அல்ல. எம்மைப் பொறுத்த வரையில் சகல குற்றவாளிகளையும் தண்டிக்க வேண்டும்.

ஒரு சிலர் இந்த விசாரணைகளில் இருந்து தப்பிப்பது எதிர்காலத்தில் மீண்டும் சிக்கலாக அமையலாம். எவ்வாறு இருப்பினும் பிரதான குற்றவாளிகள் என 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த சில வாரங்களில் ஈஸ்டர் தினத் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஏனைய சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.

குறைபாடுகள் உள்ள விசாரணை கோப்புகளில் சுமார் 75 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 சதவீத குறைபாடுகளும் பூர்த்தியான பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இந்த நடவடிக்கைகள் பூர்த்தியாகும்.

இதற்கிடையில், வழக்குகளை விரைவுபடுத்துவதற்காக சட்டமா அதிபருடன் இணைந்து பணியாற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 54 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஈஸ்டர் தினத் தாக்குதல் குறித்த வழக்குகள் முழுமைப்படுத்தப்படும். குற்றவாளிகளைத் தண்டிக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்