கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்த ஆலோசனை நடத்திய சீனா : அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்ட ஆவணத்தால் அதிர்ச்சி

🕔 May 11, 2021

லகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன்முதலில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. இந்த வைரஸை சீனா உருவாக்கியதாகவும், சீன ஆய்வகத்திலிருந்து இந்த வைரஸ் பரவத் தொடங்கியதாகவும், கொரோனா வைரஸ் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து கொரோனா வைரஸ் குறித்து சீனாவுக்குச் சென்று ஆய்வு நடத்த, உலக சுகாதார நிறுவனம் – நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

இதன்தொடர்சியாக, சீனாவில் ஆய்வு நடத்திய நிபுணர் குழு, சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவவில்லை என தெரிவித்தது.மேலும், வௌவாலிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்தது.

இதுதொடர்பான ஆய்வறிக்கை கடந்த மார்ச் 30ஆம் திகதி வெளியானது. அதில், கொரோனா வைரஸ், முதலில் வௌவாலில் இருந்து விலங்குகளுக்குப் பரவி, பின்னர் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்ததோடு, ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடிய வாய்ப்பு மிகவும் சாத்தியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், நிபுணர் குழு ஆய்வு தாமதப்படுத்தப்பட்டதாகவும், நிபுணர் குழுவிற்கு முழுமையான, உண்மையான தரவுகள் வழங்கப்படவில்லை எனவும் கூறி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.

இந்தநிலையில், அவுஸ்ரேலியா ஊடகம் ஒன்று, கடந்த 2015ஆம் ஆண்டில் சீன விஞ்ஞானிகள், நிபுணர்கள் ஆகியோர் எழுதியதாக ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில், கொரோனா வைரஸ்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து சீனா ஆலோசித்திருப்பது தெரியவந்துள்ளது.

அவுஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள அந்த ஆவணத்தில், சார்ஸ் கொரோனா வைரஸ்கள் ‘மரபணு ஆயுதங்களின் புதிய சகாப்தம்’ என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆவணத்தில், கொரோனா வைரஸ்களை மனிதர்களிடையே பரவும் புதிய வைரஸாக (செயற்கையான முறையில்) மாற்றலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து கொரோனா பரவ ஆரம்பித்த நிலையில், அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பே சீன விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்து பேசியதாக வெளியாகியுள்ள ஆவணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆவணங்களை வெளியிட்ட அவுஸ்ரேலிய ஊடகம், அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய சைபர் பாதுகாப்பு நிபுணர் ரொபட் பாட்டர்  எனபவரை அணுகியது.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அவர், “இந்த ஆவணங்கள் உண்மையானது என்ற அதிகபட்ச நம்பிக்கையை நாங்கள் எட்டியுள்ளோம். இது போலியானது அல்ல” என தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்