மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்
இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார்.
மல்லிகை எனும் இலக்கிய சஞ்சிகையை மிக நீண்ட காலமாக நடத்தி வந்தமையினால், ‘மல்லிகை ஜீவா’ எனவும் இவர் அறியப்படுவார்.
மல்லிகை சஞ்சிகையை 1966ஆம் ஆண்டு தொடக்கம் பல தசாப்தங்களாக தனியாளாய் இவர் நடத்தி வந்தார்.
யாழ்ப்பாணத்தை சொந்த இடமாகக் கொண்ட இவர், பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் 1960 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘தண்ணீரும் கண்ணீரும்’ எனும் சிறுகதை நூல், சாகித்திய மண்டல பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பாதுகை (1962), சாலையின் திருப்பம் (1967), வாழ்வின் தரிசனங்கள் (2010), டொமினிக் ஜீவா சிறுகதைகள் உள்ளிட்ட பல சிறுகதை நூல்களையும் டொமினிக் ஜீவா வெளியிட்டுள்ளார்.
இவர் 05ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனாலும் இவருடைய நூல்கள் பல்கலைக்கழக ஆய்வுகளுக்குப் பயன்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.