அமெரிக்க ஜனாதிபதி 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை: நியூயோர்க் டைம்ஸ் செய்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரியைச் செலுத்தவில்லையென ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இவ் விடயம் குறித்து ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் ‘தமது தொழில்களில் பலத்த இழப்பை சுட்டிக் காட்டி கடந்த சில ஆண்டுகளில் ட்ரம்ப் குறைந்த அளவிலேயே வரிகளை செலுத்தியியுள்ளார்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளில் பத்தாண்டுகளில் அவர் வரியே செலுத்தவில்லையென வருமான வரி ஆவணங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப் “இச் செய்தியானது முற்றிலும் போலியானது. உண்மையில், எனக்கு கிடைத்த வருமானத்துக்கு நான் வரி செலுத்தி உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ட்ரம்ப் இனுடைய நிறுவனங்களின் சட்டத்தரணியான அலன் கார்டன், நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில்,“கடந்த தசாப்தத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் மத்திய அரசாங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கான டொலர்களைத் தனிநபர் வரியாக செலுத்தியுள்ளார்.
இதில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தனது வேட்பு மனுவை அறிவித்ததிலிருந்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட வரிகளை அவர் செலுத்தியுள்ளார்” என தெரிவித்திருக்கிறார்.