இலங்கையில் அதிகபட்சம் ஒரே நேரத்தில் எத்தனை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்; முன்னாள் தளபதி சரத் பொன்சேகா விளக்கம்

🕔 June 29, 2020

யுத்தம் நடந்த காலத்தில் ஒரே நேரத்தில் 2000 முதல் 3000 வரையான ராணுவத்தில் கொல்லப்படவில்லை என்று முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தான் புலிகள் அமைப்பில் இருந்தபோது ஆணையிரவில் ஒரே இரவில் 2000-3000 ராணுவத்தினரைக் கொன்றதாக சமீபத்தில், கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முல்லைத்தீவு பகுதியில் நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகள் வசம் சிக்குண்ட 1200 ராணுவத்தினர் ஒரே நேரத்தில் விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டதாக சரத் பொனே்சேகா நினைவூட்டினார்.

இந்த தொகையே இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் ஒரே நேரத்தில் அதிகளவிலான ராணுவத்தினர் உயிரிழந்த நிகழ்வு எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அதே போன்று கிழக்கு மாகாணத்தில் 1990ம் ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் வசம் நிராயுதபாணிகளாக 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிக்குண்டதாகவும், அவர்களையும் விடுதலைப் புலிகள் கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரே தருணத்தில் அதிகளவிலான போலீஸார் உயிரிழந்த நிகழ்வு இதுவே என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ராணுவத்தினரை கருணா அம்மான் ஒரு பயங்கரவாதியாகவே கொன்றதாக கூறும் பொன்சேகா, அதனால், கருணா அம்மானுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் கருணா அம்மானை காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியில் கருணா அம்மான் எந்தவொரு சூழ்நிலையிலும் தண்டிக்கப்பட மாட்டார் என சரத் பொன்சேகா தெரிவித்ததோடு, தமது அரசாங்கமொன்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில், நிச்சயமாக கருணா அம்மான் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்