மூத்த ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்
– மப்றூக் –
மூத்த ஒலிபரப்பாளர் எஸ். நடராஜசிவம் புதன்கிழமை இரவு காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், சூரியன் எப்.எம். தனியார் வனொலியின் ஸ்தாபக முகாமையாளராகப் பொறுப்பேற்ற அவர், இலங்கை தமிழ் வானொலி வரலாற்றில் புதிய அத்தியாயமொன்றினை ஏற்படுத்தினார்.
அதுவரை தமிழ் வானோலி நேயர்கள் கேட்டிராத புதிய நிகழ்ச்சிகளை சூரியன் எப்.எம். தனியார் வானொலியின் ஊடாக நடராஜசிவம் உருவாக்கிக் கொடுத்தார். மேலும், வானொலி அறிவிப்புப் பாணியிலும் ரசிக்கத்தக்க மாற்றமொன்றை அவர் ஏற்படுத்தினார்.
ஒலிபரப்பாளர், ஒளிபரப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட நடராஜசிவம், தனியார் வானொலி மூலமாக, ஏராளமான திறமைமிகுந்த அறிவிப்பாளர்களையும் உருவாக்கினார்.
ரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப் பெற்ற ‘கற்பனைகள் கலைவதில்லை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்த நடராஜசிவம், தொடர்ந்து தமிழ் – சிங்கள நாடகங்களிலும், உள்நாட்டு மற்றும் இந்தியத் திரைப்படங்களிலும் நடித்தார்.
இன்று தனியார் வானொலிகளிகளிலும் ஊடகத்துறைகளிலும் பணியாற்றும் பலருக்கு நடராஜசிவம் வழிகாட்டியும் – வாய்ப்பளித்தும் உதவியமை நினைவுகொள்ளத்தக்கது.
அன்னார் மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனியின் அன்புக் கணவராவார்.