கிறிக்கட் ஆட்ட நிர்ணயம்: விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது

🕔 June 24, 2020

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாகவும், அதனாலேயே இலங்கை அணி தோற்றுப் போனதாகவும் சர்ச்சைக்குரிய தகவலொன்றைக் கூறிய முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவு வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது.

குறித்த விசாரணை பிரிவின் அதிகாரிகள் குழு – நாவலப்பிட்டியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரின் இல்லத்திற்கு இன்று புதன்கிழமை காலை 06 மணிக்கு சென்று இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்தமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியை பணத்துக்காக தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைசர் கூறியமை தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த தினம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்