கொரோனாவிலிருந்து மீண்டது அக்கரைப்பற்று; முடக்கப்பட்ட பகுதியும் திறக்கப்பட்டது

🕔 April 29, 2020

– பாறுக் ஷிஹான் –

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, மூன்று வாரங்களின் பின்னர் இன்று புதன்கிழமை திறந்து விடப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏறுப்பட்டதை அடுத்து, குறித்த நபர் வசித்து வந்த மேற்படி பகுதி முடக்கப்பட்டது.

இம்மாதம் 08 ஆம் திகதி இப்பிரதேசத்தில் மேற்படி நபர் கொரோனா தொற்றுக்கு உட்பட்டதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அவருடன் நேரடித் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரின் மனைவியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை தெரியவந்தது.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான நபர்களின் வீட்டிலிருந்து  சுமார் 500 மீற்றர் சுற்றுவட்டாரம், மூன்று வாரங்களாக முடக்கப்பட்டிருந்தது.

இப்பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 320 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் இதன்போது வெளிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த பிரதேசத்தினுள் – வெளிப் பிரதேசத்தவர் வரும் அனுமதிக்கப்படவுமில்லை.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட இருவரும் – வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இவர்களுடன் நேரடி மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளைப் பேணியவர்கள் என இனங்காணப்பட்ட சுமார் 75 பேர் பொலன்னறுவை – தம்மின்ன தனிமைப்படுத்தல் நிலையத்தில் தமது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்து – மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், நோய்த் தொற்று அற்றவர்கள் என தெரியவந்தமையை அடுத்து, நேற்று செவ்வாய்கிழமை தத்தமது வீடுகளுக்கு திரும்பினர்.

எனவே அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், இந்நோய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்; ஏனைய பிரதேச  மக்கள் போல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வழமைபோன்று செயற்படுமாறும் கேட்டுக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்