நிவாரண அடிப்படையில் 2600க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிப்பு

🕔 April 5, 2020

சிறைக் கைதிகள் 2691 பேருக்கு, மார்ச் 17ஆம் திகதி முதல் நேற்று 04ஆம் திகதி வரையிலான காலப் பகுதி வரை, நிவாரண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நியமித்த குழுவின் சிபாரிசுக்கு இணங்க, இந்த விடுதலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலை வளாகத்துக்கு ஜனாதிபதி மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது, கைதிகள் அவரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், நீதி அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு, கைதிகளுக்கு நிவாரம் வழங்குவதற்கான சிபாரிசை ஜனாதிபயின் செயலாளருக்கு வழங்கியிருந்தது.

இதற்கிணங்க தண்டப்பணம் செலுத்த முடியாமை, பிணை வழங்கப்பட்டிருந்த போதும் பிணை நிபந்தனைகளை முழுமைப்படுத்த முடியாமை, மிகவும் சிறிய குற்றங்களுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள், தண்டனைக் காலத்தின் பெரும் பகுதியை நிறைவு செய்தவர்கள், பாரதூரமான சுகாதார காரணங்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டு சிறையிலிருப்பவர்கள், பிணை வழங்குதல் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படாத சிறைக் கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டனர்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கான இடவசதி 10 ஆயிரம் பேருக்கானதாகும். ஆயினும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைக் கைதிகளாக உள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் சுகாதார நிலைமைகளும் இதன்போது கருத்திற் கொள்ளப்பட்டது.

விடுவிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணத்தை மீறாது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி சிறந்த முறையில் சமூகத்தில் வாழ வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்