கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது; எலிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையும் வெற்றி

🕔 April 4, 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பேர்க் (Pittsburgh) மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மருந்தைக் கொண்டு எலியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

பேராசிரியர் ஆன்ட்ரியோ கம்போட்டோ (Andrea Gambotto), லூயிஸ் ஃபாலோ உள்ளிட்டவர்கள் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்த மருந்தை உருவாக்கியுள்ளது.

இதே குழுவினர்தான் 2003 ஆம் ஆண்டு சார்ஸ் நோய்க்கும் 2014 ஆம் ஆண்டு மெர்ஸ் நோய்க்கும் மருந்து கண்டுபிடித்தனர்.

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸானது, சார்ஸ் மற்றும் மெர்ஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும். எனவே, கடந்த கால மருந்து கண்டுபிடிப்பு முறையிலேயே நிபுணர்கள் குழு கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடிக்க ஆய்வு நடத்தி வெற்றி கண்டுள்ளனர்.

இந்த தடுப்பு மருந்தை எலிக்கு செலுத்தி பரிசோதித்துள்ளனர். அது வெற்றிகரமாக செயற்படுகிறது. அதாவது உடலில் கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து போராடும் ஆற்றலை உருவாக்கி, கொரோனாவை அழிக்கிறது.

எனவே, இந்த மருந்தை மனிதனுக்கு பயன்படுத்தினால் நோய் தாக்குதலை தடுத்து விடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆனாலும், இன்னும் சில பரிசோதனைகள் நடத்த வேண்டியுள்ளது. முதலில் இந்த மருந்திற்கு அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, புதிய மருந்து ஆய்வு அமைப்பு ஆகியவற்றின் ஒப்புதலை பெற வேண்டும்.

இதற்காக விண்ணப்பிக்கும் பணியில் ஆய்வுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒப்புதல் கிடைத்த பிறகு மனிதர்களுக்கு சோதனை நடத்தப்படும். அதுவும் வெற்றி பெற்றால் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்.

ஆனாலும், அனைத்து பணிகளும் முடிந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் வரை ஆகலாம் என நிபுணர் குழுவினர் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்