கை விரித்தது பொதுஜன பெரமுன: குதிரையில் களமிறங்குகிறார் அம்பாறையில் அதாஉல்லா

🕔 March 18, 2020

– மப்றூக் –

திர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காஙகிரஸ் கட்சி, அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பெரிதும் நம்பப்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட தேசிய காங்கிரஸின் இரண்டு வேட்பாளர்களுக்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டதை அடுத்து, தனது கட்சியின் குதிரைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட அதாஉல்லா தீர்மானித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் பொருட்டு, தேசிய காங்கிரஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோர் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில், அதாஉல்லா தரப்பினருக்கு இரண்டு வேட்பாளர் ஆசனங்களே அம்பாறையில் வழங்கப்படும் என்று, பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

அதாஉல்லா தரப்பினருக்கு மூன்று வேட்பாளர் ஆசனங்களை பொதுஜன பெரமுனவில் வழங்குவதற்கு, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க இன்றைய தினம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும், இதன்பொருட்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுடன் முறுகலில் ஈடுபட்டதாகவும் அறிய முடிகிறது.

இதனையடுத்தே, அம்பாறை மாவடத்தில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்துக்கு அதாஉல்லா வந்துள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்புமனுவில் முஸ்லிம்கள் தரப்பில் முன்னாள் பிரதியமைச்சர் மையோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்வி முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் யூ.எல். அஸ்பர் ஆகியோர் இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்