தலைக் கவசம் அணியாத ஒருவர், நாட்டுப் பற்றாளராக இருக்க முடியாது: நீதிபதி அப்துல்லாஹ்
🕔 February 3, 2020
– பாறுக் ஷிஹான் –
“நாட்டு சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும். ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவர் நாட்டுப் பற்றாளனாக இருக்க முடியாது. எனவே சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக மாற வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம். அப்துல்லாஹ் தெரிவித்தார்.
தஃவா இஸ்லாமியா கலாபீடத்தின் 10 வது பட்டமளிப்பு விழாவும் பரிசளிப்பும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தஃவா இஸ்லாமிய கலாபீடத்தின் தலைவர் யூ.எல்.எம். காஸிம் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நீதிபதி அப்துல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“மாணவர்களிடத்தில் திறமையை கண்டு பிடித்து அவர்களிடம் என்னென்ன தகுதிகள் ஒளிந்திருக்கிறது என்று கண்டு பிடிப்பவர் தான் திறமையான ஆசிரியர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோன்றுதான் மாணவர்களுக்குள் எவ்வாறான திறமை காணப்படுகிறது என்பதை கண்டுபிடித்து அவற்றுக்கு ஏற்றாற்போல் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கல்வி நுட்பத்தை ஊட்ட வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கல்வியை தெரிவு செய்ய வேண்டும். மாணவர்களிடையே சிறப்புத் தேர்ச்சி இருக்கின்றது என்பதை ஆசிரியர்களுக்கு அடையாளம் காண முடியும். அவ்வாறு தான் என்னையும் ஒரு ஆசிரியர் இனங்கண்டு சட்டத்துறையில் ஈடுபடுத்தினார்.
ஒவ்வொருவருக்கும் மொழி பிரதானமானது. அந்தவகையில் நாம் தமிழ் மொழியை பிரதானமாக கொண்டாலும் சிங்கள மொழியை அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். அதுதான் இந்த நாட்டின் முதல் மொழி. சிங்களத்தை பிரதானமாக கொண்ட மக்கள் பெரும்பான்மை மக்களாக இருக்கின்றனர்.
சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக மாற வேண்டும். அதற்கு இந்த நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும். ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவர் நாட்டுப் பற்றாளனாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் சட்டத்தை மதிக்கவில்லை. சட்டத்தை மதிப்பவர்தான் இந்த மண்ணை, இந்த நாட்டை நேசிக்கும் நல்ல பிரஜையாக இருக்க முடியும்” என்றார்.
இந்த நிகழ்வின் போது காலா பீடத்தில் கற்கை நெறியை பூர்த்தி செய்ய மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டதோடு, அதிதிகள் – நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.