கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்; முஸ்லிம்களுடனும் பேசி விட்டே முடிவெடுக்க வேண்டும்: பிரதமரிடம் உலமா கட்சித் தலைவர் நேரடியாகக் கோரிக்கை
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினையை முஸ்லிம் தரப்புடனும் பேசிவிட்டே முடிவெடுக்க வேண்டும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உலமா கட்சித் தலைவர் முபாறக் மௌலவி நேரடியாக கோரிக்கை விடுத்தார்.
முன்ளாள் அமைச்சர் கருணா அம்மானின் கருத்து ஒன்றுக்குப் பதிலளித்து பேசும்போதே மௌலவி முபாறக் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த சகோதர கட்சிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை அலரி மாளிகையில் நடை பெற்றது.
இதன் போது 40 கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய கருணா அம்மான்; “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நோக்கி நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், அதனை செய்து தந்தால் போதும். அதுதான் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துதலாகும். அதை மட்டும் செய்து தந்தால் போதும்” என்றார்.
இதன் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தனது கருத்தை முன்வைக்கையில்;
“நாம் 2005ம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றோம். முழு முஸ்லிம் சமூகமும் ஒரு பக்கம் நிற்கும்போது, நாம் மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்டமையால், எம்மை முஸ்லிம் சமூக துரோகியாக கூட பார்த்தார்கள்”.
“இதன் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் யாரும் ஏச்சு வாங்காத அளவுக்கு நான் ஏச்சுக்கள் வாங்கியுள்ளேன். ஆனாலும் இந்த நாட்டின் சிறந்த தலைவராக மஹிந்த உள்ளார் என்ற உண்மையை சொல்லி வருகிறோம்”.
“கல்முனை பிரச்சினை பற்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா தனது கருத்தை இங்கு தெரிவித்திருந்தார். கல்முனை விடயத்தில் தமிழ் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது, முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. இது விடயத்தில் ஒரு தரப்பின் கருத்தை மட்டும் வைத்து தீர்வுக்கு வர முடியாது.
ஆகவே தமிழர் மற்றும் முஸ்லிம்களின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின் நீதியான தீர்வை நீங்கள் தருவீர்கள் என்பதே எமது நம்பிக்கையாகும்” என்றார்.