50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு மார்ச் மாதம் வேலை வாய்ப்பு: அமைச்சர் டலஸ் அதிரடி அறிவிப்பு

🕔 January 13, 2020

ந்த ஆண்டு மார்ச் 01 ஆம் திகதி 50,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சரும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான டலஸ் அலகபெரும தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

2012ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், க.டந்த அரசாங்கம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டதாரிகளை கடுமையான அளவுகோல்களின் அடிப்படையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமித்ததாகவும் கூறினார்.

“வேலையற்ற பட்டதாரிகளின் பட்டங்கள், வயது, அரசியல் தொடர்புகள் மற்றும் வேறு எந்த பிரிவுகளையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்” என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.

தற்போதுள்ள புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 50,000 வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்