300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன: விக்கியின் குற்றச்சாட்டுக்கு, ஹிஸ்புல்லா மறுப்பு
கிழக்கு மாகாணத்தில் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்த குற்றச்சாட்டை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மறுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விக்னேஷ்வரன் கூறியிருந்தார்.
அதேவேளை, 9000 தமிழர் பெண்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, அத்துரலியே ரத்ன தேரர் தன்னிடம் கூறியதாகவும் விக்னேஷ்வரன் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, 300 தமிழர் கிராமங்களை முஸ்லிம் கிராமங்களாக மாற்றியுள்ளதாக விக்னேஷ்வரன் வெளியிட்ட செய்தி தமிழர், முஸ்லிம் மக்கள் நல்லுறவை பாதிக்கும் வகையிலானது என்றும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்த 300 தமிழர் கிராமங்கள் எந்த மாவட்டத்தில் – முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன என்ற விபரத்தினை அவசரமாக ஊடகங்கள் வழியாகத் தெரியப்படுத்துமாறும், விக்னேஷ்வரனை ஹிஸ்புல்லா வேண்டியுள்ளார்.