எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஆதரவு கிடைக்காமல் போனால், பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்
தொகுதிகளை மீள்வரையறை செய்யும் – எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காமல் போகுமாயின், பழைய முறைமையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்படுள்ளது.
பிரதமர் ரணில் தலைமையில் நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
மாகாண சபை தேர்தலை, எந்த முறைமையில் நடத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதன் காரணமாக, புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதற்காக தயாரிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், குறித்த அறிக்கையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும். குறித்த பெரும்பான்மை கிடைக்காமல் போகுமாயின், தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான விவாதத்துக்கான திகதியை அறிவிக்குமாறும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது, தேர்தல் முறைமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தவேண்டும் என சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தின. என்றாலும் புதிய முறைமையின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும் என சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் வலியுறுத்தின.
ஆயினும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் புதிய முறைமையின் கீழ் இல்லாவிடின் பழைய முறைமையிலாவது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தன.