ஆபத்து ஏற்படுத்தும் நிலையில் மின் கம்பம்; மின்சார சபையினர் அசமந்தம்
– வி.சுகிர்தகுமார் –
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக செல்லும் வடிகான் வீதியில் நடப்படுள்ள மின்கம்பம், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தென்னை மரத்துடன் சாய்ந்து, வீழ்கின்ற நிலையில் உள்ளபோதும், அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதாக, பிரதேச மின்சார சபையினரிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், பொதுமக்கள் முறையிட்டனர். அந்த முறைப்பாட்டிற்கு அமைய, இரு வாரங்களுக்கு முன்னர் வருகை தந்த மின்சார சபையினர், விழும் நிலையிலுள்ள கம்பத்துக்கு அருகில், புதிய கம்பம் ஒன்றை நாட்டிவிட்டு சென்றனர். ஆனால், அது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மின்கம்பம் மரத்துடன் சாய்ந்துள்ளதால், மின் கம்பிகளினூடாக மின்னொழுக்கு ஏற்படும் ஆபத்துகள் உள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, ஆபத்துக்கள் மற்றும் பாரிய சேதங்கள் ஏற்படும் முன்னர், மின்சார சபையினர் உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.