உணவு, கார், கழிவறையுடன் சிங்கப்பூர் வந்தார், வடகொரிய தலைவர்

🕔 June 12, 2018

மெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் வந்துள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் பயன்படுத்துவதற்கு தேவையான உணவு, குண்டு துளைக்காத கார் ஆகியவை உட்பட, அவர் பயன்படுத்துவதற்கான மலசல கூடமும், வட கொரியாவிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.

கிம் ஜாங் உன் பயன்படுத்த தேவையான கழிவறையை உடன் கொண்டு சென்றமைக்கு முக்கிய காரணங்கள் இருப்பதாக கொரிய செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அணு ஆயுத சோதனை நிறுத்தம், பொருளாதார தடைநீக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. இதற்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்தச் சந்திப்பின்போது வடகொரியா சார்பில் கிம்முக்கு  வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார், உணவு ஆகியவை கொரியாவிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்தன. குறிப்பாக நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர கழிவறைகள் இருந்தபோதும் அவர் பயன்பாட்டிற்காக கழிவறையும் உடன் எடுத்து வரப்பட்டுள்ளது. இதற்கு சொல்லப்படும் முக்கியகாரணம், எதிரிகளுக்கு எந்த விதத்திலும் கிம்மை பற்றிய விவரங்கள் கசிந்துவிடக்கூடாது என்பது தான்.

ஏனெனில் கழிப்பறையில் இருந்து வெளியேறும், சிறுநீர், மலம் ஆகியவற்றை எதிரிகள் கைப்பற்றி, அதன் மூலம் உடலில் உள்ள குறைபாடுகள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, உடல் பருமனுக்கான காரணம், புகைப்பழக்கம், உணவுப்பழக்கம்,  மதுப்பழக்கம், சமீபத்தில் உடலில் ஏற்பட்டிருந்த பிரச்சினை,  புற்றுநோய், குடல்நோய் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களையும் மருத்துவர்களால் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் அவை எதிரிகளுக்கு  துருப்பாக அமைந்துவிடும் என்பதால் கழிவறையைக் கூட, வட கொரிய தலைவர் கிம் தன்னுடன் கொண்டு சென்றுள்ளார்.

கிம் ஜாங் எப்போதும் சுய பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். தனது சொந்த நாட்டுக்குள் பயணிக்கும்போதும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கழிவறையை எடுத்து செல்வார் என கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்