சம்மாந்துறைக்குச் செல்கிறது மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல்: எம்.பி. ஆகிறார் இஸ்மாயில்

🕔 May 31, 2018

– முன்ஸிப் –

கில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்படவுள்ளார்.

மக்கள் காங்கிரசின் உயர் தரப்பு மூலம் இந்தச் செய்தியினை உறுதி செய்ய முடிந்தது.

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியலை வழங்குவதாக, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

மேலும், கடந்த பொதுத் தேர்தலின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு சம்மாந்துறை பிரதேசம் அதிகளவு வாக்களித்ததோடு, உள்ளுராட்சித் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கும் அப்பிரதேச மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலைமைகளையும் கருத்திற் கொண்டு, அந்தப் பிரதேச மக்களைக் கௌரவிக்க வேண்டும் என்பதற்காகவும், தேசியப்பட்டியல் நியமனத்தை சம்மாந்துறையைச் சேர்ந்த இஸ்மாயிலுக்கு வழங்க, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாட் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, தனது பதவியை ராஜிநாமாச் செய்தமையின் காரணமாக, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, சம்மாந்துறை இஸ்மாயில் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்