ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு
ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் – இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது, தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த திஸநாயக்க; இவ்வாறு தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் என்றார். மேலும், கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்குஅமையவே, தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் செல்லும் சந்தர்ப்பம் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஐ.ம.சு.முன்னணி சார்பாக, புதிய நாடாளுமன்றுக்கு 96 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.