அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததன் எதிரொலி

🕔 December 12, 2017

ஜெரூஸலம் நகரை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் அமெரிக்க அரசாங்கத்தையும் கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று செவ்வாய்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியது.

பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராகவும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்க தூதரகத்தை நோக்கி செல்ல முற்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினரை பொலிஸார் தடுத்தனர்.

காலி முகத்திடல் சுற்று வட்டத்துக்கு முன்னால் ஆர்பாட்டம் நடைபெற்ற நேரத்தில், அமைப்பின் செயலாளர் ஹிஷாம் மற்றும் நிர்வாகிகளை பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி, அமெரிக்க தூதரகத்துக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் இலங்கை முஸ்லிம்களின் கண்டனத்தை பதிவு செய்யும் விதமான மகஜரை, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒப்படைத்தனர்.

பின்னர் அமைப்பின் தலைவர் ரஸ்மின் தமிழ் மொழியிலும், அமைப்பின் பேச்சாளர் அப்துர் ராசிக் சிங்கள மொழியிலும் கண்டன உரையாற்றினார்கள்.

ஜெரூஸலத்தை அபகரித்து இஸ்ரேலுக்கு கொடுக்கும் அமெரிக்காவின் கபடத்தனம் கொண்ட திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும், அரபு நாடுகளும் சர்வதேச நாடுகளும் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு எதிராக திரள வேண்டும் என்றும் கண்டன உரையில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அரபு நாடுகள் அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவுகளை முற்றாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கையினை முன்வைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்